ஐகோர்ட் தீர்ப்பு அதிமுகவுக்கு ஊதப்பட்ட சங்கு... திவாகரன் அதிரடி!
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணி வெற்றிபெறுவது சந்தேகமே என்று திவாகரன் கூறியுள்ளர்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து அதிமுகவினரும், டிடிவி தினகரனும் தங்களது கருத்துக்களைக் தெரிவித்து வந்த நிலையில், தினகரனின் உறவினர் திவாகரன், தமிழக முதலமைச்சரை மாற்றக் கூறியவர்கள் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்தது சரி என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த தீர்ப்பு அதிமுக ஆட்சிக்கு ஊதப்பட்ட சங்கு எனவும், குடுமிப்பிடி சண்டையில் அதிமுக சிதைந்து வருவதாகவும் திவாகரன் கூறினார்.
ஜெயலலிதா வென்றெடுத்த 18 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது. டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணி வெற்றிபெறுவது சந்தேகமே என்று திவாகரன் கூறியுள்ளர்.