பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் நஷ்டம்தான்! அடித்து சொல்கிறார் திருநாவுக்கரசர்!
தற்போது தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்ததை அடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தலின்போது முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நஷ்டம்தான் என்று கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மாறாக தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவி அனிதா மரணத்துக்கு தமிழக அரசு இரங்கல்கூட தெரிவிக்காதது மனிதாபிமானமற்ற செயல் என்றும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.