பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தினால் கம்பிதான்! கவலையில் நெட்டிசன்கள்!
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரை கொச்சைப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தலைமை நூலகத்தின் நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி வலியுறுத்தி உள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
மெர்சல் திரைப்படம் வெளிவந்த நிலையில், படத்தில் இடம் பெறும் வசனங்களால் மேலும் சிக்கலை சந்தித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. குறித்தும், பணமதிப்பிழப்பு குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்து பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இல.கணேசன் உள்ளிட்ட பலர், மெர்சல் படத்தில் இடம் பெறும் வசனங்களை நீக்க வேண்டும்
என்று கூறி வருகின்றனர்.
பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோரை சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைமை நூலகத்தின் நிர்வாகியும், ரயில் பயணத்தின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆசிர்வாதம் ஆச்சாரி, தனது பேஸ்புக் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர்கள், முன்னெடுத்து வரும் பொது பிரச்சனைகளுக்கு தக்க பதில் அளிக்க இயலாத கோழைகள் சிலர், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோரை விக்கிப்பீடியா போன்ற சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாக அதில் கூறியுள்ளார்.
மேலும், இந்த கோழைகளின் இத்தகைய செயல்களைத் தடுக்கும் விதமாக ஆசிர்வாதம் ஆச்சாரி தனது முகநூல் பக்கத்தில், ''தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முன்னெடுத்து வரும் பொதுப் பிரச்னைகளுக்கு தக்க பதில் அளிக்க இயலாத கோழைகள் சிலர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோரை விக்கிப்பீடியா போன்ற சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன். இக்கோழைகளின் இத்தகைய செயல்களை தடுக்கும் விதமாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்றும் ஆசிர்வாதம் ஆச்சாரி வலியுறுத்தி உள்ளார்.