The action will be taken on jayakumar - by MLA a.k bose said in interview

அமைச்சர் ஜெயகுமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்போம் என திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் கூறினார்.

அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனை நேற்று வரை 27 எம்எல்ஏக்கள் சந்தித்தனர். தற்போது, திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ், சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசி வருகிறார்.

முன்னதாக எம்எல்ஏ போஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், சிறையில் இருந்து வந்ததும், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “நான் விலகிய பின்னர், இரு அணிகளும் இணையும். கட்சி வளரும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், அணிகள் இணைவதாக இல்லை. அதனால், கட்சியை நான் வளர்க்க மீண்டும் செயல்படுவேன்” என கூறினார்.

அதன்படி, பொது செயலாளர் சசிகலாவை சந்தித்து, அவரது ஆலோசனைகளை பெற்றார்.

ஆனால், அமைச்சர் ஜெயகுமார், தனிச்சையாக பேட்டி அளித்துள்ளார். அமைச்சர்கள் கூட்டம் நடத்தி, டிடிவி.தினகரனை ஒதுக்கி வைத்ததாக பேசுகிறார். அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.

இது எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வழிநடத்திய கட்சி. இதில், அமைச்சர் ஜெயகுமாருக்கு எந்த உரிமையும் இல்லை. அடிமட்ட தொண்டர்கள் வரை டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் அனைவருமே டிடிவி.தினகரனுடன் இருக்கிறார்கள். இதில், ஜெயகுமாருக்கு இடம் இல்லை.

ஆட்சியை அவர்கள் வழி நடத்துகிறார்கள். டிடிவி.தினகரன் கட்சியை வழி நடத்துகிறார். இதை யாரும் தடுக்க முடியாது.

ஓ.பன்னீர்செல்வம், பதவி மோகத்தில் தனி அணியாக செயல்படுகிறார். அவரது கனவு பலிக்காது. எங்கள் அணி சிறப்பாக செயல்படும். டிடிவி.தினகரனை நாங்கள் சந்திப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமும் இல்லை. அமைச்சர் ஜெயகுமார் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.