thanga thamizhchelvan pressmeet

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியிடையே மோதல் உள்ளது என்றும், பதவியை தக்க வைப்பதிலேயே முதலமைச்சரும், அமைச்சர்களும் கவனம்
செலுத்தி வருவதாகவும் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்ய தேர்தல் கமிஷனின் இறுதி கட்ட விசாணை இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் நடைபெறவுள்ளது. 

இந்த விசாரணையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் பங்கேற்கின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது.

சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இந்த நேரத்தில், சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர்
இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த
புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். 

ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க
வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு கடந்த 16-ந் தேதி 2-வது கட்ட விசாரணை நடைபெற்றது. 

அன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன்பின்னர், இறுதி விசாரணையை தேர்தல் கமிஷன் இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது. 

விசாரணையில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சேர்ந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் தங்க தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
விரைவில் அதிமுக அலுவலகத்துக்கு நாங்கள் செல்லுவோம்.

சசிகலாதான் பொது செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி 7 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார். ஓ.பி.எஸ். இ.பி.எஸ் இடையே மோதல் உள்ளது. அமைச்சர்கள் இடையேயும் மோதல் உள்ளது. பதவியை தக்க வைப்பதிலேயே முதலமைச்சரும், அமைச்சர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர். 

தேர்தல் கமிஷன், சட்டப்படி இரட்டை இலை சின்னத்தை, ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓ.பன்னீர்செல்வம்தான் சின்னத்தை முடக்கினார். உண்மையான
அதிமுக தாங்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.