thanga tamil selvan speech at sattur

சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு முழுக்க, முழுக்க காரணம் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் தான் என்றும், அதிமுக தொண்டர்கள் கோவிலாக நினைத்து வணங்கி வந்த போயஸ்கார்டனிலேயே இபிஎஸ் ரெய்டு பண்ண வச்சுட்டாரே என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சி, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், வைரங்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனிலும் வருமான வரித்துறை ரெண்டு நடத்தியது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன், சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு முழுக்க, முழுக்க காரணம் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் தான் என்றும், அதிமுக தொண்டர்கள் கோவிலாக நினைத்து வணங்கி வந்த போயஸ்கார்டனிலேயே இபிஎஸ் ரெய்டு பண்ண வச்சுட்டாரே என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தினத்தந்தி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ஒரு வார்த்தை கூட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசவில்லை என குறிப்பிட்ட அவர், பதவி கிடைத்ததும் இபிஎஸ் அம்மாவை மறந்துவிட்டார் என குற்றம்சாட்டினார்.

வருமான வரித்துறையினர் ஓபிஎஸ் வீட்டில் ரெய்டு நடத்தினால் எக்கச்சக்கமாக அள்ளிக்கொண்டு போகலாம் எனவும் தங்க தமிழ்செல்வன் பேசினார்.