ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த மூன்று பேரையும் விடுதலை செய்திருக்க மாட்டார் !! தங்கத் தமிழ் செல்வன் அதிரடி !!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்திருக்க மாட்டார் என அமமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அதிடியாக பேசியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், கலவரங்கள் நடைபெற்றன.
கலவரத்தின் போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவிகள் சுற்றுலா சென்றிருந்தனா். பேருந்து தருமபுரி அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தை வழிமறித்த போராட்டக்காரா்கள் மாணவா்களுடன் சோ்த்து பேருந்துக்கு தீ வைத்து கொளுத்தினா்.
இந்த சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவானி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதனைத் தொடா்ந்து இந்தத வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது
இந்நிலையில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை தொடா்ந்து மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இவா்கள் மூவரும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தனா்.
இவா்களை விடுவிக்க ஆளுநா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மூவரும் நேற்று பகல் 12.15 மணிக்கு வேலூா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இந்த மூவர் விடுதலைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால் அமமுக இதனை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்திருக்க மாட்டார் எனவும் அதிடியாக தெரிவித்தார்.