அத்துமீறி நுழைந்து ஆவணத்தை கைப்பற்றிய தளவாய் சுந்தரம்... அதிகாரிகள் கண்ணில்படாமல் வெளியில் தூக்கி எறிந்தது ஏன்?
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு அத்துமீறி நுழைந்த தளவாய் சுந்தரம், ஒரு முக்கிய ஆவணத்தை நைசாக எடுத்துக் கொண்டு வந்து தமது உதவியாளரிடம் கொடுத்தார்.
அதை அங்கிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் கண்டு பிடித்து, அந்த ஆவணத்தை வாங்க முற்பட்டனர். அதற்குள் அந்த ஆவணத்தை, விஜயபாஸ்கரின் கார் டிரைவர் பறித்துக் கொண்டு வெளியில் ஓடிவிட்டார்.
அவரை சி.ஆர்.பி.எப் வீரர்கள் துரத்திக் கொண்டு ஓடினர். அதற்குள், அவர் வெளியில் நின்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில், அதை வீசி எறிந்து விட்டார்.
அதை, ஆதரவாளர்கள் சிலர் பத்திரமாக எடுத்துக் கொண்டு, அங்கிருந்து ஓடிப்போய்விட்டார். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களால், ஆவணத்தை எடுத்து ஓடிய ஆதரவாளரை பிடிக்க முடியாமல் போயிட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வெளியில் நின்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் கேமராவிலும் பதிவாகி உள்ளது.
இதையடுத்து, வருமான வரி சோதனை நடத்தும், விஜயபாஸ்கர் வீட்டுக்குள், தளவாய் சுந்தரம் அத்துமீறி நுழைந்தது ஏன்?
அந்த ஆவணத்தை, அதிகாரிகள் கண்ணில்படாமல் வெளியில் தூக்கி எறிந்தது ஏன்?
அந்த ஆவணத்தை அமைச்சர் மறைக்க முயன்றது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
இதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அத்து மீறி நுழைந்து அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஆவணத்தை கைமாற்றிய, தளவாய் சுந்தரமும் கைதாவார் என்று கூறப்படுகிறது.