வீரஅழகர் கோயில் தீ விபத்து; எடப்பாடி அரசுக்கு ஆபத்தா? ஜோதிடர்கள் சொல்வது என்ன?
மானாமதுரையில் ஆடித் திருவிழாவின்போது யாரும் எதிர்பாராத விதமாக வீரஅழகர் தீயில் கருகிய சம்பவம் எடப்பாடி அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளதால் ஆளும் கட்சியினரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரையில் வீரஅழகர் கோயில் ஆடித்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது. நேற்று 7-ம் நாள் சுந்தரபுரம் கடைவீதி வியாபாரிகள் சங்க மண்டகப்படியில் சுவாமி வீரஅழகர் எழுந்தருளினார்.
பகல் 2 மணியளவில் மண்டகப்படி பந்தலில் திடீரென தீப்பற்றியது. அப்போது அங்கிருந்த வீரஅழகர் சிலை மீதும் தீப்பிடித்தது. இதில் சுவாமி அணிந்திருந்த அங்கவஸ்திரம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் தீயில் கருகின. மேலும் கலைநிகழ்ச்சிக்காக வந்திருந்த செண்டை மேளங்கள், மைக்செட், பந்தல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கருகி சாம்பலாகின.
இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் என்று கூறப்படுகிறது. பிறகு தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் அழகர் சிலைக்கும் சேதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஆன்மிக ஜோதிடர்கள் கூறியபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோது அ.தி.மு.க.வினர் வெடி வைத்ததில் காளையார் கோவில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோதே சிறை சென்றார். பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோன்று மானாமதுரையில் பிரதோஷத்தன்று வீர அழகர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் எடப்பாடி அரசுக்கு ஆபத்தாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.