சீக்கியர்களுக்கு காட்டும் கருணை தமிழர்களுக்கு கிடையாதா..? மத்திய அரசுக்கு ராமதாஸ் கிடுக்குப்பிடி..!
சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்? என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலைக்கு காரணமான பயங்கரவாதி பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்கு தண்டனை, குருநானக் பிறந்தநாளை ஒட்டி ஆயுள்தண்டனையாக குறைத்தது மத்திய அரசு. சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்?
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 6 மருத்துவக் கல்லூரிகளுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கது. மத்திய அரசும் அதன் பங்கை ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த மாவட்டங்களுக்கான புதிய ஆட்சியர் அலுவலக வளாகம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பிற கட்டமைப்பு வசதிகளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்.
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி தென்காசி ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.