இந்தியாவிலேயே தமிழகத்துக்குத் தான் முதலிடம் ! எதில் தெரியுமா ?
இந்தியாவிலேயே டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்றும், இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. நாள்தோறும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடியே இருந்தது.
டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெங்குவின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது
இதனையடுத்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு ஒன்று சென்னை வந்தது. இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஷ்வாஸ், குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையத்தைச் சேர்ந்த கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்தக்குழு மாநிலம் வாரியாக நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், உயிரிழந்தவர்களின் எண்ணைிக்கையும் கணக்கிட்டு அறிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா , கடந்த 2017 ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என குறிப்பிட்டார்.
.தமிழகத்தில் மட்டும் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 65 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிராவில் 41 பேரும், கேரளாவில் 37 பேரும் டெங்கு பாதித்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் 253 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்தனர் என்று நட்டா தெரிவித்தார்