தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகபடுத்தபட்டுள்ளது.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதிலிருந்து தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் குறைந்தபட்ச எம்.எல்.ஏ.க்களே இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

இதனால், எடப்பாடி பழனிச்சாமி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளார். நாளை சட்டசபை கூடுகிறது.

இதற்காக ஆயத்தமாகி வரும் எடப்பாடி பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கிணைத்து வாக்களிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதால் தலைமைச் செயலகத்திலும் சென்னையின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகபடுத்தபட்டுள்ளது.

சட்டசபை வளாகத்திற்குள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.