tamilaruvi manian talks about rajinikanth
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் எனவும், காந்திய வழியில் தான் அவரது அரசியல் பாதை எனவும், ரஜினியின் அரசியலுக்கு காந்திய மக்கள் இயக்கம் துணை நிற்கும் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி சேருவார், அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா, மக்கள் அவரை ஏற்று கொள்வார்களா என்று தான் தற்போது தமிழகத்தில் அனைவரது வாயும் அசை போடுகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் ஆசைக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கற்களை அரசே விற்க வேண்டும். இதன்மூலம் அரசிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
மதுக்கடை நடத்துவதால் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மறைமுகமாக வருவாய் கிடைக்கிறது.
தமிழகத்தில் விற்பனை வரி 100 சதவீதம் வசூலிக்கபடுவதில்லை. விற்பனை வரி வசூலில் ஊழல் நடக்கிறது.
காந்திய மக்கள் இயக்கத்தின் யோசனையை அரசு கேட்டிருந்தால் 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதில் அரசுக்கு என்ன பிரச்சனை?
ஊழலை தடுப்பதற்கான முதல் முயற்சி லோக் ஆயுத்தா. லோக் ஆயுத்தா அமைப்பை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி புரட்சிகரமான கட்டத்துக்கு வந்துள்ளது.
தேவதூதன் வருவாரா என்ற நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. அதிமுக இரண்டு அணியாக உடைந்து சிதறி விட்டது.
அதிமுக இரு அணிகளும் ஊழல் மலிந்த அமைப்புகளாக உள்ளன.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம். ஊழலற்ற அரசை உருவாக்க நினைக்கிறார் ரஜினிகாந்த்.
காந்திய வழியில் நடக்க விரும்புவதாக ரஜினி தன்னிடம் கூறினார். ரஜினியின் அரசியலுக்கு காந்திய மக்கள் இயக்கம் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
