டி-சர்ட் மூலம் ஒருபோதும் தமிழ் வளராது... வானதி சீனிவாசன் சுளீர் பேச்சு..!
டி-சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. திமுகவினர் டி-சர்ட்டில் தமிழ் வளர்ப்பதை விடுத்து தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கிறது என தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்புகளை தற்போது தமிழகத் திரைத்துறை பிரபலங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். இவர்களின் நூதனப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்திக்கு எதிராக டி-சர்ட் புரட்சியை உருவாக்கி வருகின்றனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாக்கியராஜின் மகன் சாந்தனு, அவரது மனைவி கீர்த்தி உள்ளிடோர், இந்தி தெரியாது போடா, நான் தமிழ்ப் பேசும் இந்தியன் என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டுகள் அணிந்து போஸ் கொடுத்து வருவதுடன் அதே டி-சர்ட்டுகளை அணிந்து வலம் வரவும் செய்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் இவ்வாறு டி-சர்ட் அணிந்து வருகிறார்கள். நேற்று டுவிட்டரில் ட்ரெண்டிங்கானது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் டி-சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- டி-சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. திமுகவினர் டி-சர்ட்டில் தமிழ் வளர்ப்பதை விடுத்து தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கிறது. அதேசமயம் மேலும் ஒரு மொழியை கற்க வேண்டும் என்றார்.