தமிழ், தமிழர் குரல் கப்சாவா.? பொங்கல் பரிசு பொருட்கள் வடஇந்தியாவில் கொள்முதல் ஏன்.? பற்ற வைக்கும் பாஜக.!
பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது? கடந்த வருடம் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பொருட்களை அளித்தன?
21 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தில் வாங்காமல், குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் மர்மம் என்ன? என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டே கால் கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருந்தார். “பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா தமிழக அரசு? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தில் வாங்காமல், குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் மர்மம் என்ன? உப்பை மட்டும் தமிழக நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதன் ரகசியம் என்ன? அவை அனைத்திலும் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கிறதே? ஒரு வேளை, திமுகவினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அல்லது அங்கேதான் பேரம் படிந்ததா? ஏன்? தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?
சென்ற வருடம் பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டிய திமுக, இந்த வருடம் அதே நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துள்ளதா? அப்படி செய்திருந்தால் எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்ன குற்றச்சாட்டு தவறு என்று ஒப்பு கொள்கிறதா? அது சரியென்றால் இப்போது ஊழல் நடந்துள்ளதா? மேலும், பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது? கடந்த வருடம் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பொருட்களை அளித்தன? இந்த வருடம் எந்த நிறுவனங்களிடம் வாங்கப்பட்டது போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.