கமலுக்கும் தமிழ் சறுக்கும்: ட்விட்டர் நாயகனை கிளறும் இணைய வாலுகள்
கமல்ஹாசனை விட மிக அழகானதாக சமீபகாலத்தில் பார்க்கப்படுகிறது அவரது தமிழ். அரசியல் மற்றும் பொது பிரச்னைகள் குறித்து தனது கோபதாபங்களை ட்விட்டர் மூலமாகத்தான் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் மனிதர். அவரை ‘ட்விட்டர் நாயகன்’ என்று அ.தி.மு.க. விமர்சித்தாலும் அதில் அவருக்கோ அல்லது அவரது தரப்புக்கோ குறையொன்றுமில்லை.
காரணம்? ஆதி மொழியான தமிழும், ட்விட்டர் எனும் சமகால தொலைதொடர்பு வசதியும் அழகுற கலக்கும் அழகு மையப்புள்ளியாக கமல்ஹாசன் திகழ்வதுதான்.
சமகால கொச்சையான வார்த்தைகளுக்கு மாற்றாக ‘ஒளி, விளி, செய்யா அரசு, ஆவன, அமையாதீர், அகலாதீர்’ என்று அழகு தமிழ் வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வருவது அவர் மீதான மரியாதையை ஏகத்துக்கும் உயர்த்தியிருக்கிறது, கமலை சிறந்ததொரு தமிழன் என்றும் உணர்த்தியிருக்கிறது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் பள்ளி மாணவன் பார்கவ் பலியானது குறித்து நேற்று ஒரு ட்விட்டர் பதிவை மேற்கொண்டார் கமல். முதலில் ஒரு பதிவை இட்டவர், பின் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு பதிவினையிட்டார். அதில்...
‘அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.’ என்று கூறியிருக்கிறார்.
இதில்தான் வந்தது ஒரு சிக்கல். அதாவது ‘பெற்றோர்’ என்று சரியான தமிழில் இருப்பதற்கு பதிலாக ‘பெற்ரோர்’ என்று ’ர’ எழுத்தை மாற்றிப் பயன்படுத்திவிட்டாராம்.
இதை உடனடியாக சமூக வலைதளங்களில் டேக் செய்து பகிர்ந்தனர் இணைய குறும்பர்கள். கூடவே ‘கமலுக்கும் தமிழ் சறுக்குமா?’ என்று நக்கலாக ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள்.
அதாவது பெரும் தமிழ்ப் புலவர் போல் வழக்கில் இல்லாத ஆனால் சிறப்பான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார் கமல். ஆனால் மிக சாதாரண ஒரு வார்த்தையில் பிழை விட்டிருக்கிறார். அப்படியானால் கமலுக்கும் தமிழில் சறுக்குதல் ஏற்படுமா? என்று கேட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் படபடத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா அல்லது உண்மையிலேயே கமல் பிழையாகத்தான் ட்விட்டினாரா?
ஒரு வேளை தான் பிழையாகவே ட்விட்டியிருந்தால், அதற்கு காரணம் சொல்லி கமல் ட்விட்டப்போகும் செந்தமிழ் விளக்கத்தை நினைத்தால் தலை தட்டாமாலை சுற்றுகிறது.