மானமுள்ள தமிழர்கள் பாஜக ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது- பொங்கித் தீர்த்த தா.பாண்டியன்
மானமுள்ள தமிழர்கள் யாரும் தமிழகத்தை அவமதிக்கும் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா,பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வரும் ஜுலை மாதம் 25 ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து குடியரசுத் தலைவர்தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கப்போவதாக பாஜக தெரிவித்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கய்யா நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
அதே நேரத்தில் நேற்று பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் பேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தைச் சேர்ந்தவர் என எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் எதிர்கட்சிகள் சார்பில் கண்டிப்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா,பாண்டியன் , மானமுள்ள தமிழர்கள் யாரும், தமிழகத்தை அவமதிக்கும் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
பல பிரச்சனைகளில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் பாஜகவை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் தா.பாண்டியன் கேட்டுக் கொண்டார்.