AIADMK: முதல்வரை தமிழ்நாடே வரவேற்கிறது.. பாராட்டி தள்ளிய ஆர்.பி.உதயகுமார்.. அப்படி என்ன செய்தார் ஸ்டாலின்?
கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல் பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை. ஏழை, எளியவர்களின் நலன் கருதி முழு ஊரடங்கின் போது, அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அம்மா உணவகம் தங்கு தடையின்றி செயல்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை தமிழ்நாடே வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், மதுரை ரயில் நிலையம் அருகே அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார்;- கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல் பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை. ஏழை, எளியவர்களின் நலன் கருதி முழு ஊரடங்கின் போது, அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அம்மா உணவகம் தங்கு தடையின்றி செயல்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை தமிழ்நாடே வரவேற்கிறது. நாங்களும் வரவேற்கிறோம். நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒமிக்கரான் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கொரோனா அச்சத்தால், வறுமையால் 4 பேர் விஷம் அருந்தி உள்ளனர். அதில் ஜோதிகா, ரித்தீஷ் 2 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். எனவே, இவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.