தமிழக போக்குவரத்துத் துறை துருப்பிடிச்சுபோச்சு... அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி குற்றச்சாட்டு.!
தமிழகப் போக்குவரத்துத் துறையே துருப்பிடித்திருக்கிறது என்று அத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராஜ கண்ணப்பன் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆட்சி மாறும்போது தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவது உண்டு. யார் யார் தவறு செய்தார்களோ, அவர்கள் மீது மட்டும்தான் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர அரசை குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு ரூ.1,400 கோடியை மானியமாக வழங்கியுள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள் மொத்தமாக ரூ.42,184 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துத் துறையே துருபிடித்திருக்கிறது. அதை சரி செய்ய இன்னும் மாதங்கள் பிடிக்கும். ஜெர்மனி கடனுதவி செய்ததன் மூலம் 2,215 சாதாரண பேருந்துகள், 500 எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களில் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம். அதன்படி பேருந்துகளை சுத்தம் செய்யும் செலவு 68 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக குறைத்துள்ளோம்.
நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருவது திமுகதான். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டப் போராட்டம் தொடரும்” என்று ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.