மணல் மாஃபியாக்களின் வாயில் மண்ணை வாரிப்போட்ட எடப்பாடி!
மணல் மாஃபியாக்களின் கொள்ளைக்கு செக் வைக்கும் விதமாக மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் நாளை மறுநாள் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அனுமதி வழங்காத நிலையில் ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், தமிழக அரசு இறக்குமதி மணலை அரசு வாங்குமா வாங்காதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதில் அளித்த தமிழக அரசு, “தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலில் 85 சதவிகித சிலிக்கான் உள்ளதால் அது கட்டுமானத்துக்கு உதவாது, அதை வாங்கி நாங்கள் என்ன செய்வது?” என்று கூறியிருந்தது.
புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம். ராமையா என்டர்பிரைசஸ் லிமிடெட் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் உரிமம் பெற்று மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்திருந்தது. மொத்த மணலும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜிஎஸ்டி வரியாக ரூ. 38,39,347 செலுத்தியுள்ளது.
மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 6 லாரிகளில் 96 டன் மணல் கொண்டு செல்லப்பட்டது. அந்த மணலைக் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் அரசு நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனியார்கள் மணல் விற்பனை செய்வதற்கு தமிழக கனிம வள சட்டப்படி அனுமதி பெற வேண்டும். மேலும் துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்தது.
அதிகாரிகளின் அதிரடியால், துறைமுகத்திலேயே மணல் இருப்பதால் அக். 28ஆம் தேதியில் இருந்து தினமும் ரூ.2 லட்சம் துறைமுகத்துக்குக் கட்டணமாகச் செலுத்தி வருகிறது.