கொரோனா நிவாரணம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடி நிதியுதவி
தமிழகத்தில் கொரோனா நெருக்கடி சூழலை எதிர்கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவகையில், கொரோனாவை எதிர்கொள்ள தாராளமாக நிதியுதவி செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது ஒரு மாத ஊதியத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.1 கோடியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.