தமிழக பட்ஜெட்: அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும்.. சட்டமன்றத்தை அதிரவைத்த பிடிஆர்..
தமிழக காவல்துறையில் உள்ள 14,317 காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பப்படும் என அறிவித்த அவர், தீயணைப்புத் துறைக்கு 405.13 கோடி நிதி ஒதுக்குவதாக கூறினார்.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அதில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க 111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும் என அறிவித்த அவர், அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகளும் கட்டப்படும் என அறிவித்துள்ளார். மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியில் அவர் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் பிடிஆரின் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சரியாக காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய அவர், பட்ஜெட் உரையில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம் சூட்டி உரையை துவங்கினார். அரசின் நிதிநிலை மோசமானநிலையில் உள்ள நிலையில் அது நிச்சயம் சீர்படுத்தப்படும் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம் என்றார், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அது படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பட்ஜெட் வாசித்த அவர், பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய உடனேயே நடப்பு நிதி ஆண்டில் குறைந்தது 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என அறிவித்தார. அதேபோல ஆட்சி தொடங்கிய உடன் கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு 4000 வழங்கப்பட்டுள்ளது என அறிவித்த அவர் நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா நிதி வழங்கியது திமுக அரசுதான் என கூறினார். தற்போது உள்ள நிதி நிலைமையை சீர் செய்ய குறைந்தது 2 லிருந்து 3 ஆண்டுகளாவது தேவைப்படும் என அவர் கூறினார். தமிழக பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு 29. 43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காவல் துறையை மேம்படுத்த 8,930,43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
தமிழக காவல்துறையில் உள்ள 14,317 காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பப்படும் என அறிவித்த அவர், தீயணைப்புத் துறைக்கு 405.13 கோடி நிதி ஒதுக்குவதாக கூறினார். நீதித் துறைக்கு 1,713.30 கோடி ரூபாயும், அதேபோல் உணவு மானியத்திற்கு 8,437.57 கோடி ரூபாயும் நிதியாக ஒதுக்குவதாக கூறினார். மேலும் அத்துறையில் புதிய ரேஷன் கடைகள் விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க 111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும் என அறிவித்த அவர். அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகளும் கட்டப்படும் என்றார். அவரின் இந்த அறிவிப்புக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.