தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “Y” பிரிவு பாதுகாப்பு..! மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை :
பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அப்பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பாஜகவை எப்படியேனும் தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் அண்ணாமலை மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர களப்பணியாற்றி வருகிறார்.
’ஒய்’ பிரிவு பாதுகாப்பு :
அதேசமயம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக செயல்பட்டு வரும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் ஏற்கனவே அறிக்கையாக தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் அந்த அறிக்கை அடிப்படையில் அவருக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அண்ணாமலைக்கு மாநில அரசால் ’ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
திமுக Vs பாஜக - கடும் விமர்சனம் :
இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு என்பது இந்தியாவில் 4-வது இடத்தில் இருக்கக்கூடிய பாதுகாப்பு பிரிவாக பார்க்கப்படுகிறது. 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். குறிப்பாக அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.