நக்சல் கோட்டையை சுற்றுலாத் தளமாக்கிய தமிழன் !! கலக்கும் ஐபிஎஸ் அதிகாரி !!
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நக்ஸலைட்டுகள் மிகுந்த ஜார்கண்ட் மாநிலம் லோகர்தகா மாவட்டத்தை சிறப்பு மிக்க சுற்றுலாத் தளமாக மாற்றி அதை பராமரிக்கும் பணியினை அவர்களுக்கே வழங்கி அசத்தியுள்ளார். அவரது செயலால் திருந்தி வாழும் நக்ஸலைட்டுகளும், அம்மாநில மக்களும் இந்த சாதனைத் தமிழனை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம், லோகர்தகா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
லோகர்தகா மாவட்டம் முழுவதும் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் ஒரு அழகான பகுதியாகும். ஆனால் அந்த இயற்கை எழிலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நக்ஸலைட்டுகள், சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களையும் நக்ஸலைட்டுகளாக மாற்றி அட்டூழியம் செய்து வந்தனர்.
நக்ஸலைட்டுகளில் தலைனாக இருந்த நகுல் யாதவ், அப்பகுதி முழுவதையும் தனது கண்ட்ரோலில் வைத்திருந்தார். இந்த நிலையில்தான் அங்கு எஸ்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் கார்த்திக்.
அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை என்ன செய்தார் தெரியுமா ? ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு வாலிபால் விளையாட பயிற்சி அளித்தார். அதற்கான உபகரணங்கள், மைதானம் போன்றவற்றை உருவாக்கி அவர்களின் கவனத்தை திசை திருப்பினார்.
அவ்வப்போது நக்ஸலைட்டுகளின் பேச்சைக் கேட்டுக் கொண்ட வன்முறையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் தற்போது முற்றிலும் மாறி வாலிபால் பிளேயர்கள் ஆனார்கள். இதையடுத்து கார்த்திக் தனது அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.
அது தான் இயற்கை எழில் சூழ்ந்த அந்த பகுதியை சுற்றுலாத் தளமாக்குவது. அங்குள்ள நீர்வீழ்ச்சி ஒன்றை கார்த்திக், அரசு உதவியுடன் சிறப்பு மிக்க சுற்றுலாத் தளமாக்கினார். இப்போது அந்த பகுதி முழுவதும் அருமையான சுற்றுலாத் தளமாகி விட்டது. மாதம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.
ஒரு மாத்திற்கு அங்கு பார்க்கிங் கட்டணம் மட்டுமே 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலாகிறது. இது அவரின் மிகப்பொரிய சாதனையாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் நக்ஸலைட்டுகளை ஒழிப்பதிலும் கார்த்திக் தீவிரம் காட்டி வந்தார்.
நக்ஸலைட்டுகளுக்கு பணம், பொருள் செல்லும் வழிகளை அடைத்தார். அவர்களுடன் சுமூகமான பேச்ச வார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அவர்களுடன் பேசிப் பேசியே மனங்களை மாற்றினார். தற்போது நக்ஸலைட்டுகளின் தலைவன் நகுல் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தனர்.
தற்போது அவர்கள் அனைவரும் திருந்தி வாழத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கே சுற்றுலாத் தளத்தை பராமரிக்கும் பொறுப்பு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.