தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான தலிபான்கள் ஆட்சி நடக்குது... ஹெச்.ராஜா ஆவேசம்.!
தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
கும்பகோணத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம், விவசாய சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் என திமுக அரசு நிறைவேற்றுகிறது. சட்டம் நிறைவேறிய பிறகு தீர்மானம் நிறைவேற்றி என்ன நன்மை? அரசியல் புரிதலே இல்லாமல் திமுக அரசு செயல்பட்டுகொண்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் வகையில் காவல் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதற்கு முதல்வர், அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டுமா? கரூரில் சிலை செய்வோரிடம் போலீஸார் அத்துமீறியுள்ளனர். அந்த அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும். போலீஸார் அநாகரீகமாக நடந்துகொண்டதையும் தமிழக அரசின் அக்கிரமத்தையும் வீடு வீடாக எடுத்து செல்வோம்” என ஹெச்.ராஜா தெரிவித்தார்.