உடனே சார்ஜ் எடுங்க... அந்த வேலையை மட்டும் முடிங்க... மோடி இடத்தைப் பிடிக்க ராகுலுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!
பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் கூட்டணி அமைய ராகுல் காந்தி களத்தில் இறங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் நடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இங்கே இளம் தலைவர் ராகுல் வந்துள்ளார். அவரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கிறேன். இது என் உரிமையான வேண்டுகோள். அவரிடம் தொலைபேசியில் பேசும்போது சில நேரம் சார், சார் என்று அழைப்பேன். உடனே அவர் மறுப்பார். ‘பிரதர்' என்று அழைக்குமாறு சொல்வார். எனவே, சகோதரனாக உரிமை கலந்த அன்பான வேண்டுகோள். இந்தியா இன்று மதவாத கும்பலிடம் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறுகிறது. எனவே, இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், இப்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அப்படி சேர்ந்த காரணத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தமிழகத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பா.ஜ.க. வாஷ் அவுட் என்ற நிலைதான். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கலாம். ஆனால், அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் 37 சதவீதம்தான்.
37 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சியில் இருக்கிறது என்றால், 63 சதவீத மக்கள் பாஜகவை எதிர்த்து பிரித்து வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழகத்தில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. எனவே ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உடனே பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள். உடனடியாக இந்திய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைய பொறுப்பேற்று, அந்தப் பணியில் இறங்கிட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.