தப்லிக் ஜமாத் மனிதத்திற்கும், தேச நலனிற்கும் ஆபத்தானது- ஷ்யாம் கிருஷ்ணசாமி பகீர் குற்றச்சாட்டு..!
டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தென் மாநிலங்களில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் 1926-ம் ஆண்டில் தப்ளிக்-எ-ஜமாத் எனும் பெயரில்ஒரு முஸ்லிம் அமைப்பு இந்தியாவில் துவக்கப்பட்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. இதற்கு ‘மர்கஸ்’எனப்படும் தலைமையகம் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் இயங்கி வருகிறது. இதன் சார்பில், இஸ்லாமிய மதமாநாடுகள் மற்றும் மதப்பிரச்சாரக் கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இவை தப்ளிக் ஜமாத்தார் என்றழைக்கப்படும் அதன் உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டங்களில், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கூடுவது வழக்கம். டெல்லியில் உள்ள மர்கஸுக்கு வரும் வெளிநாட்டவர், இந்தியாவில் தமதுபிரச்சாரப் பயணம் முடித்த பின் அங்கிருந்தே சொந்த நாடுகளுக்கு திரும்புவது வழக்கம். கடந்த மார்ச் 8-10, 12-15 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் இரண்டு இஸ்திமாக்கள் நடைபெற்றன. அதில், சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 1,850பேர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுடன் தமிழகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாகவே பரவத் தொடங்கி விட்ட கொரோனா வைரஸ், இஸ்திமாவிற்கு விமானங்களில் வந்த வெளிநாட்டவர்களில் சிலருக்கும் தொற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது அப்போது கண்டறியப்படாத நிலையில் நடந்து முடிந்த கூட்டத்தில் இந்தியர்களுக்கும் கரோனா தொற்றுக்கான சூழல் நிலவி உள்ளது. இதை அறியாமல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட பலரும் வீடு திரும்பிவிட்டனர். தமிழர்களுடன் இந்தோனேசியா உள்ளிட்ட சில வெளிநாட்டவர்களும் தமிழகத்தின் தப்ளிக் ஜமாத்துக்களில் கலந்து கொள்ள சென்றனர். இவர்களால் தமிழகத்தின் சேலம், ஈரோடு மாவட்டங்களில் பலருக்கு கரோனா தொற்று பரவியது
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’கொரோனா பரவியதற்கு காரணம் என்பதை தவிர்த்து தபிலிகி ஜமாத்தை பற்றி மேலோட்டமாக ஆராய்ந்தால் கூட அது காலத்திற்கு ஒவ்வாத மிக பிற்போக்கான மதவாத அமைப்பு என்று தான் தெரிகிறது. மனிதத்திற்கும், தேச நலனிற்கும் ஆபத்தானது, முற்போக்கு பேசுபவர்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அமைப்பு. செய்வார்களா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.