swamy opinion about violence in sterlite protest and rajini statement

தமிழ்நாட்டில் சில பயங்கரவாத சக்திகள் மக்கள் பின்னால் ஒளிந்துகொண்டு கலவரத்தை ஏற்படுத்துவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழ்நாட்டில் பயங்கரவாத சக்திகள் வளர்ந்துள்ளன. அதுகுறித்து எனக்கு டெல்லியில் கிடைத்த தகவல்களை ஆளுநருடன் பகிர்ந்து கொண்டேன். தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்கள் பின்னால் ஒளிந்துகொண்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். போராட்டத்தில் நக்சலைட்டுகள், விடுதலை புலிகளின் எஞ்சிய அமைப்புகள், வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள், ஐ.எஸ் ஆகியவை பின்னணியில் உள்ளன. ஜல்லிக்கட்டு மற்றும் கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியிலும் அவர்கள் உள்ளனர். அணுமின் நிலையம் வரக்கூடாது என வெளிநாட்டு சக்திகள், சில அமைப்புகள் போராட்டத்தை தூண்டிவிட்டன. 

ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் இவர்களின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரணை கமிஷன் தான் கூற முடியும். விசாரணை கமிஷன் அறிக்கை வரும் வரை அதுகுறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது.

போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்ற ரஜினிகாந்தின் கருத்து குறித்து நான் இப்போது ஏதும் தெரிவிக்க முடியாது. ரஜினி இப்போது ஒன்றைச் சொல்லிவிட்டு பின்பு அதுகுறித்து வேறொரு கருத்தைத் தெரிவிக்கலாம். அவர் மாறி மாறி பேசினால், நானும் எனது கருத்தை மாற்ற முடியாது. அதனால் ஒரு வருடம் பின்னர் கருத்து தெரிவிக்கிறேன். நான் ஒரு அரசியல்வாதி; எனவே என்னிடம் சினிமா நடிகரான ரஜினியின் கருத்து குறித்து சொல்ல வேண்டாம் என தெரிவித்தார்.