நேர்மையான ஆளப் பார்த்தா அதிர்ச்சிதா ஆவீங்க! ஆளுநர் நடவடிக்கை குறித்து எஸ்.வி.சேகர் டுவிட்!
கோவை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், நேர்மையான ஆளுநரைப் பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தின்போது கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள், தற்போது செய்து
வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால், அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்திது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சவுகரியங்களுக்காக இயங்கிய ஆளுநர்களைப் பார்த்தவர்களுக்கு, நேர்மையான ஆளுநரைப் பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், வழக்கமாக தமிழக அரசு செய்து கொடுக்கும் சவுகரியங்களுக்காக இயங்கிய ஆளுநர்களைப் பார்த்தவர்களுக்கு, நேர்மையான ஆளுநரைப் பார்த்தால், அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஸ்தம்பித்துப்போயுள்ள தமிழ்நாடு அரசு இனி இயங்க ஒரு வாய்ப்பு. புரோகித் வைச்சு (இயங்க) செய்வார் என்று கூறியுள்ளார்.