அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது

ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கு பதிலளிக்க இபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக இடைக்கால பொதுச்செயலளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. அதில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் என தீர்ப்பு அளித்தனர். 

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போதே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. 

மேலும், தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கு பதிலளிக்க இபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பதில் அளிக்கவும் உதத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.