supreme court allowed media to live telecast the floor test
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தற்காலிக சபாநாயகர் போபையாவிற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தற்காலிக சபாநாயகரை நியமித்து எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, அவரே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கர்நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணை தொடங்கியதும் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை தொடங்கினார். அப்போது, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா, எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்தக்கூடாது. போபையா மூத்த உறுப்பினர் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவரது கடந்த கால செயல்பாடுகளும் சர்ச்சைக்கு உள்ளானவையாக உள்ளன என கபில் சிபல் வாதிட்டார்.
கர்நாடக ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டசபை நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதால், எந்த முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நியாயமான முறையிலேயே நடைபெறும் என உறுதியளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டசபை நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு பதிவு செய்யப்படுவதோடு தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யலாம். அதனால் போபையாவே தற்காலிக சபாநாயகராக நீடித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
