தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. ஆட்சியை தக்கவைத்தது போல, கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்த சசிகலாவை பொதுச்செயலாளராக நிர்வாகிகள் அறிவித்தனர்.
முதல்வராக சசிகலா முயற்சி செய்து அது நிறைவேறவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. 4 ஆண்டு சிறைவாசம் முடிந்த பின்னர் தமிழகம் வந்த சசிகலா சில காலம் அரசியலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்தது இதை அடுத்து அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க தான் அனைத்து மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் சசிகலா. இரண்டாம் கட்டமாக மார்ச் 21, 22ஆம் தேதிகளில் கும்பகோணம், சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார் இதைத்தொடர்ந்து, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று காலை தனது தி.நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு அவர் திருச்சி செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டத்தை கூட்ட அவரது ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர். ‘தியாகத்தாயே, அதிசயமே, பலர் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்த தியாகச்சுடரே, தலைவியே’ என்று சசிகலாவைப் புகழ்ந்துரைக்கும் சுவரொட்டிகளில் அதிமுக நிர்வாகிகள் சிலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக கலைவாணி என்பவரின் பெயரில் ஏராளமான சுவரொட்டிகளைக் காண முடிகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் முன்பு அதிமுக கோட்டையாகக் கருதப்பட்டது. எனினும், அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு கொங்கு மாவட்டங்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள சசிகலா, அங்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அதிமுக தலைமைக்கு, குறிப்பாக எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது. இது சசிகலா தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இருப்பினும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்று பேட்டியளித்துள்ளார் சசிகலா. சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சேலம் வருகை அவர் திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
