”ஆட்சியை கலைக்கலாம் ; தேர்தலை சந்திக்க தயார்” - கெத்து காட்டும் கனகராஜ் எம்.எல்.ஏ...
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு இருப்பதால் ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம எனவும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனவும் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒன்றி இருந்த டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி நீக்கியதாலேயே இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த கையோடு புதுச்சேரிக்கு சென்று விட்டனர். அங்கு ரிசார்டில் தங்கி ஜாலியாக டூர் சுற்றி வருகின்றனர்.
மேலும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் இல்லையென்றால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து ஆட்சியை கலைக்காமல் எம்.எல்.ஏக்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்ற நோக்கில் எடப்பாடி செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு இருப்பதால் ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம எனவும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனவும் தெரிவித்தார்.
பதவி போட்டியே நடக்கிறது எனவும், ஒரு எம்.எல்.ஏவான நானே யாருக்கு ஆதரவு அளிப்பது என குழம்பியிருக்கிறேன் என்கிற நிலையில், மக்களை சந்திப்பது தான் ஒரே வழி எனவும் குறிப்பிட்டார்.