திடீர் பெண்ணுரிமை பேசுபவரின் கட்சியில் ஒரு பெண் ம.செ.கூட இல்லை... ஓபிஎஸ்ஸை காய்ச்சியெடுத்த கமல்..!
இரண்டரை ஆண்டுகள் ஆண், இரண்டரை ஆண்டுகள் பெண் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மக்களாட்சியில் ஆண் இரண்டரை ஆண்டுகளும் பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக கமல் இன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும்போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார்.
சசிகலாவை மனதில் வைத்தே ஓ. பன்னீர்செல்வம் பேசினார் என்று அரசியல் அரங்கில் விமர்சனங்கள் எழுந்தன. அதைக் குறிப்பிடும் விதமாகவே கமல்ஹாசன் ‘எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை’ என்று விமர்சித்துள்ளார்.