முதலமைச்சர் பதவியில் இருந்த ஓபிஎஸ்சை அந்த பதவியில் இருந்து விலக வைத்து சசிகலாவை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அப்போது பாஜக மேலிட தொடர்பு மூலம் இந்த திட்டத்தை தவிடுபொடியாக்கினார் ஓபிஎஸ். பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்து, அனைத்தும் மாறிப்போனது வேறு கதை.

காலையில் சசிகலா சென்று ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பிய நிலையில் நள்ளிரவில் தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்துவிட்டு திரும்பியுள்ளார் டிடிவி தினகரன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2017ம் ஆண்டு முதல் சசிகலா – ஓபிஎஸ் இடையிலான மோதல் தொடங்கியது. அப்போது முதல் தனது அரசியல் எதிரி சசிகலா தான் என்கிற முடிவுடன் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் பதவியில் இருந்த ஓபிஎஸ்சை அந்த பதவியில் இருந்து விலக வைத்து சசிகலாவை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அப்போது பாஜக மேலிட தொடர்பு மூலம் இந்த திட்டத்தை தவிடுபொடியாக்கினார் ஓபிஎஸ். பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்து, அனைத்தும் மாறிப்போனது வேறு கதை.

இந்த சம்பவங்களின் பின்னணியில் ஓபிஎஸ் – சசிகலா இடையிலான மோதல் தான் அனைத்திற்கும் காரணமாக இருந்தன. பெரியகுளத்தில் பால் பண்ணை வைத்திருந்த ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராகும் அளவிற்கு உயரக் காரணம் சசிகலா தான். ஓபிஎஸ் மீது சசிகலாவிற்கு இருந்த நம்பிக்கை தான் 2001ம் ஆண்டு அவரை முதலமைச்சர் பதவி வரை உயர்த்தியது. ஆனால் அதன் பிறகு தனது விசுவாசத்தை முழுக்க முழுக்க ஜெயலலிதாவிடம் காட்ட ஆரம்பித்தார் ஓபிஎஸ். அப்போது முதல் ஓபிஎஸ்சை சற்று விலக்கியே வைத்தார் சசிகலா.

இவை எல்லாம் சேர்ந்து தான் 2017ம் ஆண்டு சசிகலாவை கட்சியில் இருந்து தூக்கும் அளவிற்கு ஓபிஎஸ்சை செயல்பட வைத்தது. இந்த மோதல் சுமார் 4 வருடங்களாக நீடிக்கும் நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா மறுபடியும் அதிமுகவை கைப்பற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் தற்போதைய அதிமுக முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கிறது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுகவினர் தான் தற்போது அக்கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். தென்மாவட்டங்களில் பலம் பொருந்தியதாக இருந்த அதிமுக தற்போது பலவீனமாகியுள்ளது என்று கூட கூறலாம்.

இந்த நிலையில் தான் சசிகலா – ஓபிஎஸ் சந்திப்பு நிகழ்ந்தது. பழைய கசப்பான அனுபவங்களை எல்லாம் மறந்து ஓபிஎஸ் மனைவி மரணத்தை தொடர்ந்து அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் சசிகலா. இந்த சந்திப்பு வழக்கமான ஒரு சடங்காக இல்லாமல் உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவே நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முந்தைய பகையை மறந்து ஓபிஎஸ் – சசிகலா பரஸ்பரம் தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. இதே போல் நெல்லையில் இருந்த டிடிவி தினகரனும் நள்ளிரவு நேரத்தில் ஓபிஎஸ் இல்லம் சென்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பியுள்ளார்.

இந்த நிகழ்வும் கூட வழக்கமான சம்பர்தாயமாக இல்லை. டிடிவியும் உணர்வுப்பூர்வமாகவே ஓபிஎஸ்சை சந்தித்து துக்கம் விசாரித்துள்ளார். ஏற்கனவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதலே ஓபிஎஸ் அவருடன் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் தான் ஒரே நாளில் ஓபிஎஸ்சை சசிகலா மற்றும் தினகரன் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகள் துக்கம் விசாரிப்பதற்கானதாக இருந்தாலும் கூட, நிச்சயமாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

ஏனென்றால் அதிமுக தற்போது முழுக்க எடப்பாடி கட்டுப்பாட்டில் உள்ளது. தனி ஒரு நபராக எடப்பாடியை ஓபிஎஸ்சால் எதிர்க்க முடியவில்லை. இதே நிலை தான் சசிகலா மற்றும் தினகரனுக்கும். எனவே அதிமுகவை மறுபடியும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்ட வர ஓபிஎஸ்சை சசிகலா, தினகரன் பயன்படுத்தக்கூடும் என்கிறார்கள். எடப்பாடியை எதிர்க்க சசிகலாவுடன் இணைந்து செயல்படக்கூட ஓபிஎஸ் தயாராகக்கூடும் என்றும் கூட சொல்கிறார்கள். இதற்கான ஒரு வாய்ப்பை தான் இந்த சந்திப்புகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன என்றே கூறலாம்.