மகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பனும், கார்த்தியை பாம்பாய் துரத்திய அவரது ஆதரவாளர்களும் மனம் மாறியதால் சிவகங்கை தொகுதியில் விஷம் முறிவுக்கு வந்துள்ளது. 

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியாக இருந்த சுதர்சன நாச்சியப்பன் திடீரென காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

காங்கிரஸில் சுதர்சனநாச்சியப்பனுக்கு சீட் கொடுக்காததால், அவரது ஆதரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்கத் தயாராகி வருவதாக கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் இருந்தனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சனநாச்சியப்பன் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை வென்றார். கடந்த 2001-ல் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்ததால், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை சிதம்பரம் தொடங்கினார். பின்னர் 2004 தேர்தலில் காங்கிரசுடன் இணைந்தார். அப்போதே ப.சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது என சுதர்சனநாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்ப டுத்தி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை கொடுத்தது.

சில ஆண்டுகள் மத்திய இணை அமைச்சர் பதவியும் வகித்தார். இந்த முறை ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், எப்படியும் சீட் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சுதர்சனநாச்சியப்பன் இருந்தார். ஆனால் கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கே மீண்டும் சீட் கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுதர்சனநாச்சியப்பன், ப.சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார். அவரது ஆரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வேலை பார்க்கவும் தயாராகி வருவதாகக் கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சுதர்சன நாச்சியப்பன் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், ‘’ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலாச்சாரத்தை காக்க வேண்டிய சூழ்நிலையில் தேர்தலை மக்கள் சந்திக்கின்றனர். சிவகங்கையில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. கிருஷ்ண பகவான், அர்ஜூனன் குறி கிளியின் கண்ணை பார்த்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல, இந்த காலக்கட்டத்தில் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக என்று அப்போது கருணாநிதி கூறினார். அதேபோல் ஸ்டாலின் ராகுலை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களின் கஷ்டங்களை நீக்கும் ஆட்சி மத்தியில் வர வேண்டும். அந்த நோக்கத்தில் இருந்து சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அதற்காகத்தான் இந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்தேன். 100 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர் குடும்பம் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். இதற்கு அழைப்பு விடுத்தார்களா.. இல்லையா என்று பார்க்கக் கூடாது’’ என அப்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம் மகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பனும், கார்த்தியை பாம்பாய் துரத்திய அவரது ஆதரவாளர்களும் மனம் மாறியதால் சிவகங்கை தொகுதியில் விஷம் முறிவுக்கு வந்துள்ளது.