தமிழ்நாடு குட்டிச்சுவராகி வருகிறது - சு.சுவாமி கடும் தாக்கு
சினிமா நடிகர்களின் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவராகி வருகிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கருணாதியும் ஜெயலலிதாவும் இல்லாத அரசியல் களத்தில் இறங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என ரஜினியும் கமலும் அரசியல் களம் காண்கின்றனர்.
ரஜினி, கமல் மட்டுமின்றி விஷாலும் அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாகவும் அவரும் அரசியல் களம் காணலாம் எனவும் கூறப்படுகிறது. நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது அவரது ரசிகர்களிடையே வேண்டுமானால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கலாமே தவிர பொதுவெளியில் நடிகர்களின் அரசியல் பிரவேசத்திற்கு எதிரான கருத்துகளும் பரவலாக நிலவுகின்றன.
நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்களில் மிக முக்கியமானவர்கள் சீமானும் சுப்பிரமணியன் சுவாமியும் தான். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தேவையில்லை என சீமான் ஏற்கனவே விமர்சித்து வருகிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையிலும் ரஜினியை கடுமையாக விமர்சிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர், ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசத்தையும் எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, நடிகர்களின் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவராகி வருவதாக கடுமையாக விமர்சித்தார்.
தினகரனின் அரசியல் செயல்பாடுகளையும் குறுகிய காலத்தில் அவரது அரசியல் வளர்ச்சியையும் பாராட்டிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தின் தண்ணீர் தேவையை போக்க கடல் நீரை குடிநீராக்கலாம்.
ஆனால், காவிரியிலிருந்துதான் தண்ணீர் வேண்டும் என கேட்பது நாடகம் என தெரிவித்தார்.