அதிமுக ஆட்சியில் கட்டுன எல்லா அடுக்குமாடி குடியிருப்பையும் ஆய்வு பண்ணுங்க.. அதிமுகவை ரவுண்டு கட்டும் சிபிஎம்!
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களையும் செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்று கட்டுப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அந்தக் குடியிருப்பை ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கே.பி.பார்க் குடியிருப்புகளைப் போலவே இப்போது பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. தரமற்ற வீடுகளால் பண இழப்பு மட்டும் ஏற்படவில்லை, மிகப்பெரும் உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களையும், செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். எளிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என கே.பாலகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.