stipand for10 th and 12 tamil mediumk students
தமிழ் வழியில் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ‘ஸ்மார்ட்’ வகுப்பை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம பேசிய அமைச்சர், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் மூலம் தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.


தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் உள்ளன. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது.
அதன்படி பள்ளியில் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
