Sterlite management has power to enforce police as wage forces vaiko says
மதுரை
காவலாளர்களை கூலிப் படைகளைப்போல செயல்படுத்தி இந்தப் படுகொலைகள் நடத்தும் அளவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு சக்தி உள்ளது என்று வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர், "தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் அந்தப் பகுதிக்கு உடனடியாக முதல்வரும், அமைச்சர்களும் சென்றிருக்க வேண்டும்.
இறந்தவர்கள், காயம்பட்டவர்கள் பார்க்கச் சென்ற உறவினர்களை காவலாளர்கள் தாக்கி உள்ளனர். இந்தச் சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மக்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை. காவலாளர்களை கூலிப் படைகளைப்போல செயல்படுத்தி இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது.
தமிழக அரசானது, பிரதமர் மோடிக்கு கைகட்டி சேவகம் செய்து வருகிறது. அந்த தைரியத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எந்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வந்தாலும் நடத்தவிட மாட்டோம். அடுத்த கட்டமாக, மக்களோடு கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
