மாநிலங்களவை இடைத்தேர்தல்... திமுகவில் 8 மாத எம்.பி. பதவி யாருக்கு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் சாய்ஸ் யார்.?
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடைத்தேர்தலில், 8 மாதங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு பதவி யாருக்கு திமுகவில் வழங்கப்படும் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு அக்டோபர் 4 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இரண்டு இடங்களையும் சட்டப்பேரவை எண்ணிக்கை அடிப்படையில் திமுகவே வெற்றி பெறும். இந்நிலையில் இத்தேர்தலில் திமுக வேட்பாளர்களாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழியும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இத்தேர்தலில் இருவரும் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 29-6-2022 வரை மட்டுமே உள்ளது. எனவே, அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர் 8 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருக்க முடியும். கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2-4-2026 வரை இருக்கிறது. எனவே அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர் 4 ஆண்டுகள் 2 மாதம் பதவியில் இருக்க முடியும். எனவே, இந்தப் பதவியில் 8 மாதப் பதவி யாருக்கு, 4 ஆண்டுகள் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “8 மாதப் பதவிக்கு நிறுத்தப்படும் வேட்பாளருக்கு, அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் வாய்ப்பு அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த இடத்துக்கு கனிமொழி நிறுத்தப்பட்டால், அவர் மீண்டும் அடுத்த ஆண்டும் எம்.பி.யாக தொடருவார்” என்று தெரிவித்தன.