state election commission say sorry to high court

உள்ளாட்சித் தேர்தலை உள்நோக்கத்துடன் நடத்தாமல் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபரில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பாணையில் பழங்குடியினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, உள்ளாட்சித் தேர்தலை 2016 டிசம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும், இந்த தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் பலமுறை காலக்கெடு விதித்தும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதியன்று, செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிட்டு நவம்பர் 17-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த காலக்கெடுவுக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாததை அடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று திமுக சார்பில் அதன் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக மாநில தேர்தல் ஆணையர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நகராட்சி நிர்வாக செயலாளர் ஆகியோரை இணைத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில், நீதிமன்ற உத்தரவை பின்பற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடையாததால்தான் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்குள் தேர்தலை நடத்தமுடியவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த முடியாமல் போனதில் உள்நோக்கம் இல்லை. எனினும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாமல் போனதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்படுகிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து மாநில தேர்தல் ஆணையரின் பெயரையும் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் பெயரையும் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.