அதிமுக ஆட்சி தானாக கவிழும்... - உறுதியுடன் காத்திருக்கும் ஸ்டாலின்...
தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை நாங்கள் கலைக்க தேவையில்லை எனவும், அது தானாக கவிழும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. எந்த அணி உண்மையான திமுக எனவும், யார் சொல்வதை ஏற்று கொள்வது எனவும் பெரும் குழப்பம் அதிமுகவினரிடையே எழுத்துள்ளது.
இதனிடையே டிடிவி தினகரன் எடப்பாடி தரப்பை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து தெளிவான ஒரு நிலையை தேர்தல் ஆணையமும் வெளியிடாமல் காத்து வருகிறது.
இந்நிலையில், விருதாச்சலத்தில் நடைபெற்று வரும் திமுக பிரமுகரின் திருமண விழாவில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை நாங்கள் கலைக்க தேவையில்லை எனவும், அது தானாக கவிழும் எனவும் தெரிவித்தார்.
துணை முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வத்திற்கு ஆளுநர் பூங்கொத்து கொடுப்பது எந்த வகையில் நியாயம் எனவும், சட்டமன்றத்தை கூட்டி பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் எடப்பாடி ஆட்சியை எம்.எல்.ஏக்களே அப்புறப்படுத்துவார்கள் எனவும், பிறகு திமுக மலரப்போகிறது எனவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் நலன் டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ளது எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசினார்.