தமிழகத்துக்கு தண்ணீர் தர தயார் ! அதிரடியாக அறிவித்த கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி !!
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர தயாராக இருப்பதாக அறிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் குறித்து அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழகத்துக்கு தண்ணீர் தர முன் வந்துள்ளார்.
தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்க தயார் என்று இன்று கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராய் விஜயன் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை பார்த்தவுடன், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடனடியாக கேரள மாநில முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததுடன் தமிழகத்திற்கு தண்ணீர் தந்து உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவின் அடிப்படையில் தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கேரள மாநில முதலமைச்சர் அளிக்க முன்வந்துள்ள தண்ணீரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாகவும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக திமுக தலைவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் நன்றி தெரிவித்துள்ளார்.