stalin statement

மெஜாரிட்யை இழந்த எடப்பாடி பழனிசாமி அரசின் சட்டவிரோதமான முடிவுகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எக்காரணத்தைக் கொண்டும் துணை போகக்கூடாது என்று திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ந் தேதியில் இருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்..

தி.மு.க.வின் சார்பிலும், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் சார்பிலும் குடியரசு தலைவரிடம் மனு அளித்து பெரும்பான்மையை நிரூபிக்க இந்த அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரிக்கை வைத்த பிறகும், பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், உள்துறை அமைச்சகமும் செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதல்-அமைச்சரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பெரும்பான்மையை இழந்த இந்த அரசின் சட்டவிரோதமான முடிவுகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எக்காரணத்தைக் கொண்டும் துணை போகக்கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.