பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை!! ஆளுநரை அட்டாக் செய்த ஸ்டாலின்.. பதிலடி கொடுத்த அமைச்சர்
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை ஸ்டாலின் விமர்சித்தார். ஸ்டாலினின் விமர்சனத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக அவர் பேசிய ஆடியோ வைரலானது.
இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. எனவே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் பன்வாரிலால், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின், பேராசிரியை விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் இருக்கும்போது, வேந்தரான ஆளுநர் எதன் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடுகிறார்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையது எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் உறுதியாக தெரிவித்தார்.