நள்ளிரவில் பரபரப்பான கோபாலபுரம்…. காவேரி மருத்துவமனை டாக்டர் குழு அவசர வருகை…. ஸ்டாலின், அழகிரி மீண்டும் வந்தனர்!!
உடல்நலமின்றி இன்றி கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை டாக்டர்கள் திடீரென நள்ளிரவில் வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் தற்போது அவசர, அவசரமாக மீண்டும் கோபாலபுரம் திரும்பியுள்ளனர். கருணாநிதியின் தனி மருத்துவ்ர் கோபாலும் அங்கு வந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கருணாநிதியின் உடல் மோசமடைந்ததாக செய்திகள் வெளியானது. துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் நேற்று இரவு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.
தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். குடியரசுத் தலைவர் , குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி, சந்திர பாபு நாயுடு, மம்தா பானர்ஜி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டஅரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினிடம் போனில் நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்திளார்களிடம் பேசிய ஸ்டாலின், கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். இதையடுத்து இரவு 10 மணிக்கு ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர்கள் தங்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு கோபாலபுரம் இல்லம் திடீரென பரபரப்பானது. காவேரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவும், கருணாநிதியின் தனி மருத்துவரான கோபால் ஆகியோர் அவசரமாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஸ்டாலின், அழகிரி, துர்கா ஸ்டாலின் மன்றும் உறவினர்களும், துரை முருகன், ஆ.ராசா ஆகியோர் தற்போது மீண்டும் கோபாலபுரம் வந்துள்ளனர். இதனால் கோபாலபுரம் பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.