Asianet News TamilAsianet News Tamil

"ஜெயலலிதா வழியையே அடுத்து வரும் முதல்வரும் பின்பற்ற வேண்டும்" - இலங்கை தமிழ் தலைவர் உருக்கம்

srilankan tamil-chief-talks-about-jayalalitha
Author
First Published Dec 8, 2016, 3:28 PM IST


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கை பிரச்சினையில் கடைபிடித்து வந்த கொள்கைகளையே அடுத்து வரும் தமிழக முதல்வரும் பின்பற்ற வேண்டும். அதனையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று இலங்கைத் தமிழத் தலைவர் சிவாஜிலிங்கம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு இதயம் செயல்இழப்பால் மரணமடைந்தார். இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனாவும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் ஜெயலலிதா  மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இலங்கை தமிழர்கள் பிரச்னையிலும், தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படை தாக்கும் பிரச்னைகளிலும் உரிமையை நிலைநாட்ட ஜெயலலிதா கடுமையாகப் போராடினார். இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க அவர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். தமிழர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசையும், இலங்கை அரசையும் அவர் தொடர்ந்து நிர்பந்தித்து வந்தார்.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் தலைமைப் பதவியை ஏற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் எவ்வாறு செயல்படுவார் என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உறவினரும், முக்கிய தமிழ்த் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றிய அதே அனுமுறையை,  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து அழுத்தம்தர வேண்டும். பாக் ஜலசந்திப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக ஜெயலலிதா கடுமையாகப் போராடினார். தமிழக மீனவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே அவர் அவ்வாறு போராடினார்’, என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios