தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் இங்கிலீஷ் சரளமாக பேச அதிரடி திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை. 8, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசமுடியவில்லை.
தமிழ் வழியில் படிக்கும் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு அரைமணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை. 8, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசமுடியவில்லை.
எனவே, பள்ளி முடிந்த பிறகு 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேர வகுப்பும், 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் அரை மணி நேர ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழ் வழியில் பயிலக்கூடிய ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலம் பேச முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, இது நல்ல முயற்சி என பாராட்டினார்.