ஆர்.கே.நகரில் 4 நாட்கள் ஆய்வு - கத்தை கத்தையாக அறிக்கை - டெல்லி பறந்தார் சிறப்பு தேர்தல் அதிகாரி
ஆர்.கே.நகரில் நான்கு நாட்கள் ஆய்வுக்கு பிறகு சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா டெல்லி சென்றுள்ளார். பார்வையாளர்கள் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வார் என தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், பாஜக சார்பில் கரு,நாகராஜன் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமுறைகள் மீறல் போன்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் தேர்தல் கட்டாயம் நடக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று மாலை 5 மணியுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் இன்று அதிகாலை முதலே அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஆர்.கே.நகரை ஆய்வு செய்ய சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா கடந்த 16 ஆம் தேதி சென்னை வந்தார். 4 நாட்களாக ஆய்வு மேற்கொண்ட அவர் இன்று மீண்டும் டெல்லி சென்றுள்ளார்.
அங்கு ஆர்.கே.நகர் குறித்த ஆய்வறிக்கையையும் பணப்பட்டுவாட குறித்த புகார்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பார் என தெரிகிறது.